Friday, March 15, 2019

நெஞ்சோரத்தில் ஒரு ஈரம்

ஜோட்டுப் பிள்ளைகளாய் வெய்யிலில் ஆடி...
ஆற்றங்கரை குடைந்து களிமண் எடுத்து,
சொப்பு சட்டியில் கற்களி வைத்து...
கிளிஞ்சளில் அதை பறிமாறி,
அரசமர இலையில் விசிறி செய்து...
ஆலமர காற்றில் கண்ணயர்ந்து,
காவிரி தடத்தில் குழி பறித்து...
குவளைப்பூக் கொண்டு குளித்துலர்த்தி,
கருவேலம் சுள்ளியில் மச்சு வீடமைத்து...
ஊர் பிள்ளையாரை காவல்வைத்து,
வேப்பங்கொட்டையில் போர் நடத்தி...
கொட்டாங்குச்சியில் மழை குடித்து,
அலரிப்பூ மாலைமாற்றி நார்தாலி கட்டி...
பொழுதுசாய, புழுதியோடு சிரித்து,
வாழ்ந்த அந்த வாழ்க்கைகள்...
பாட்டி வீட்டில்!
வௌவால் வாழும் பரணில்
அடுத்த விடுமுறைக்காக சேமித்த,
எடுக்க மறந்த ரகசியங்களைப் போல் -
இனி கிட்டாத நினைவுகள்